ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.. முதலமைச்சர் பழனிசாமி ஆவேச பிரசாரம்.!
ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.. முதலமைச்சர் பழனிசாமி ஆவேச பிரசாரம்.!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலையொட்டி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இன்று காலை பவானியில் தனது பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நான் இங்கு தான் படித்தேன். பவானி அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை இங்கு தான் படித்தேன். இந்த பவானி நகரம் முழுவதும் சிறுவயதிலே நன்கு அறிந்த பகுதி. பவானி தொகுதி முழுவதும் எனக்கு நன்றாக தெரியும்.
இந்த பகுதியில் தான் எனது ஊர் இருக்கிறது. பவானி தொகுதியையும் எடப்பாடி தொகுதியையும் இடையில் பிரிப்பது காவிரி ஆறு ஒன்றுதான். எனவே நன்கு அறிமுகமான ஈரோடு பவானி தொகுதியிலேயே முதன் முதலாக பேசுவதில் எல்லா வல்ல இறைவன் எனக்கு கொடுத்த பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்.
இன்றைக்கு முதலமைச்சர் என்பது ஒரு பணி. இங்கு வருகை தந்து அமர்ந்திருக்கிறீர்களே அத்தனை பேரையும் தமிழகத்தின் முதலமைச்சர்களாக நான் பார்க்கிறேன். எனவே நீங்கள் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றுகின்ற பணிதான் எனது பணி.
ஆகவே உங்கள் பகுதியில் வாழ்ந்து மக்களோடு மக்களாக இணைந்து மக்களுடைய எண்ணங்களை முழுமையாக தெரிந்தவர் இந்த தமிழகத்தினுடைய முதலமைச்சராக இன்றைக்கு பதவி வகித்துள்ளேன் என்று சொன்னால் நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆகவே நமது பகுதியில் என்ன பிரச்சினை இருக்கிறது. அதை எப்படி தீர்ப்பது என்று நன்கு உணர்ந்திருக்கிறேன். இன்று வேளாண் பெருமக்கள் நிறைந்த பகுதி நம்முடைய பவானி சட்டமன்ற தொகுதி.
ஆகவே வேளாண் பெருமக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும். அது எங்களுடைய அரசு இன்று கவனமாக பார்த்து செயலாற்றி கொண்டிருக்கிறது. வேளாண் பெருமக்கள் என்று சொன்னால் அதற்கு நீர் தேவை. தண்ணீர் இருந்தால் தான் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியும்.
வேளாண் பணிகள் நடைபெற்றால்தான் விவசாய தொழிலாளிக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆக இரண்டையும் சரியான முறையில் செய்ய வேண்டும் என்பதற்காகதான் எங்களுடைய அரசு குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து இன்றைக்கு நமது ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதியில் இருக்கின்ற பெரும்பாலான ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக இன்றைக்கு முழுக்க முழுக்க விவசாய பங்களிப்போடு அந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம்.