மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்.. தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு.!
மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்.. தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு.!
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.
கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமாஜா இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், தமிழக அரசை விமர்ச்சித்து உரையாற்றினார்.
இதே போன்று கடந்த ஜுன் மாதம் 5ம் தேதி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து ட்விட்டரில் சில கருத்துக்களை அவர் பதிவிட்டிருந்தார். இதே போன்று முதலமைச்சரை விமர்சித்து பேசியது குறித்த செய்தி முரசொலி நாளிதழில் வெளியானது.
இது பற்றி தமிழக அரசு தரப்பில் 6 அவதூறு வழக்குகள் சென்னை பாரிமுனையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்ததால், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் ஆஜரானார்.
ஸ்டாலின் நீதிமன்றத்திற்கு வருவதையொட்டி போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என திடீரென்று குவிந்ததால் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது.