உதயநிதி படம் பார்க்க அமைச்சர்கள் முதல் தி.மு.க தொண்டர்கள் வரை தியேட்டரில் குவிவதன் பின்னணி!
வழக்கத்திற்கு மாறாக உதயநிதி நடிப்பில் வெளியாகி உள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை திமுக-வில் அமைச்சர்கள் தொடங்கி, அடிமட்டத் தொண்டர்கள் வரை மிகப்பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள். அதற்கான பின்னணி குறித்து பார்க்கலாம்.
மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் எனக் கட்சியினர் பலரும் திரைப்படத்தைப் பார்க்க வருபவர்களுக்குப் பரிசுக் கூப்பன், மரக்கன்று, இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.
மாமன்னன் படத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என உதயநிதி கூறிவிட்டார். விரைவில் அமைச்சர் பதவி கைமாறும் என்பதால், அதற்கான வேலைகள் நடந்து வருவது உறுதியாகிவிட்டது.
உதயநிதிக்கு பதவி வழங்கப்படும் போது, மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் ஏற்படலாம். அதேபோல, அமைச்சரவையில் தங்களுக்கான இடத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதாலேயே தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள இப்படி செய்கின்றனர் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.
புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜா, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், காஞ்சிபுரம் மேயர், சட்டமன்ற உறுப்பினர், கரூர் மேயரும் முதல் நாளே இந்தப் படத்தைப் பார்த்துவிட்டார்கள்.
மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஒருபடி மேலே சென்று ஒரு ஷோவுக்கான அனைத்து டிக்கட்டுகளையும் புக் செய்து இலவசமாக வழங்கப்படும் என நோட்டீஸே அடித்து வெளியிட்டுள்ளார்.
Inputs From: Vikadan