பஞ்சலோக சுவாமி சிலைகளை 2 கோடிக்கு விற்க முயற்சி - பெரிய கடத்தல் நெட்வொர்க்கு குறி வைக்கும் போலீஸ்!
கடலுார் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியில், பஞ்சலோக சுவாமி சிலைகளை, 2 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாச்சலம், இருப்புக் குறிச்சியைச் சேர்ந்த மகிமைதாஸ் என்பவர், தன் வீட்டில், ஐந்து தலை நாகத்துடன், மாரியம்மன் மற்றும் பெருமாள் பஞ்சலோக சுவாமி சிலைகள் பதுக்கி இருப்பதை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்தனர். அவர்களிடம் சிலை வாங்குவது போல பேசி வரவழைத்தனர்.
சிலைகளுடன் வந்த மகிமைதாசை பிடித்து விசாரித்தனர்.அப்போது, இந்த சிலைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. விருத்தாச்சலம் பெரியகோட்டிமுளை பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து என்பவர், ஏதோ கோவிலில்திருடப்பட்ட சிலைகள் என கொடுத்தார்.இரண்டு கோடி ரூபாய்க்கு விற்றால், கமிஷன் தருவதாக கூறினார். அதனால், சிலைகளை விற்க முயன்றேன் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஈரோடு மாவட்டம், கொடுமுடிபகுதியில் பதுங்கி இருந்த, பச்சமுத்து என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரும் அரியலுாரை சேர்ந்த முருகானந்தம் என்பவர், மிகவும் பழமை வாய்ந்த கோவில் சிலைகளை விற்றுத் தருமாறு கூறினார். நான், மகிமைதாசிடம் கொடுத்து விற்கச் சொன்னேன் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, சிலைகளை மீட்ட போலீசார், பச்சமுத்து, மகிமைதாஸ், ஆகியோரை கைது செய்தனர்; முருகானந்தத்தை தேடி வருகின்றனர்.
Input from: dinamalar