கிரிப்டோகரன்சி வணிகம் ஆபத்தானதா? எச்சரிக்கை செய்யும் RBI !

கிரிப்டோகரன்சி வணிகம் பற்றி எச்சரிக்கை செய்த RBI கவர்னர்.

Update: 2021-11-13 13:58 GMT

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் கரன்சி வர்த்தகங்களில் நிறைய ஆபத்துகள் உள்ளன என்று முதலீட்டாளர்களை எச்சரிக்கை செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "நிதி உறுதித்தன்மை பார்வையில் இருந்து பார்க்கும்போது கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் கரன்சி வர்த்தகங்கள் தீவிர ஆபத்துகளைக் கொண்டதாக உள்ளன. தற்பொழுது வரலாற்று உச்சங்களை எட்டிய டிஜிட்டல் கரன்சிகள் தொடர்ந்து கடும் இறக்கங்களையும் சந்தித்து வருகின்றன. எனவே முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அறிவுரை கூறியுள்ளார்.


கடந்த ஆண்டு கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பாக RBI வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்ததோடு, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மீதான தடையையும் நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் இந்திய முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் தான் மிகவும் பிரபலமாகி வருகிறது. பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்துவருகின்றன. இப்போது பிட்காயின் 67,089 டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. ஓராண்டில் 131 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.


ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீடுகள் 3 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. ஆனால் கிரிப்டோ வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அரசு இன்னும் இயற்றவில்லை. அதற்கான முயற்சிகளில், துறைசார்ந்த நிபுணர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. கிரிப்டோ வர்த்தகத்தில் ஏற்கெனவே பலகட்ட எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட நிலையில், அரசு தீவிர வரம்புகளை நிர்ணயிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்  கிரிப்டோ வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy:Economic times


Tags:    

Similar News