#FactCheck : சென்னை விமான நிலைய முனையங்களுக்கு அண்ணா, காமராஜர் பெயர் தவிர்க்கப்பட்டதா? உண்மை என்ன?
1. அவர்கள் மேற்கோளிட்ட கட்டுரையின் படி, அறிஞர் அண்ணாவின் பெயர் சர்வதேச முனையத்திற்கு சூட்டப்பட்டு விட்டது.
2. காமராஜரின் பெயர் கட்டுமான பணிகள் நிறைவு முடிந்தவுடன் சூட்டப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கொரானா காரணமாக இன்னும் கட்டுமான பணிகள் நிறைவடையவில்லை.
தேர்தல் வரவிருக்கும் வேளையில், செய்திகளைத் திரித்து, போலி செய்திகளை பரப்புவதற்கு சில அரசியல் கட்சிகள் தயங்குவதில்லை. தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி இன்று வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டுமான முனையங்களுக்கு அறிஞர் அண்ணா மற்றும் காமராஜர் ஆகியோரின் பெயர்கள் உள்நோக்கத்துடன் விடுபட்டுள்ளதாக ஒரு டைம்ஸ் ஆப் இந்தியாவின் கட்டுரையை மேற்கோளிட்டுள்ளனர். இது எந்த அளவுக்கு உண்மை?
’தலைவர் கலைஞர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் மற்றும் காமராசர் உள்நாட்டு முனையம் ஆகிய பெயர்கள், சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டுமானங்களில் உள்நோக்கத்துடன் தவிர்க்கப்பட்டுள்ளன’https://t.co/eq5L1xFBQZ#WeRejectADMK
— DMK IT WING (@DMKITwing) February 10, 2021
அவர்கள் மேற்கோளிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்திக் கட்டுரை கடந்த மார்ச் 2020 இல் வெளியானது. அந்த கட்டுரையின் தகவல்களின்படி, சென்னை விமான நிலையத்தில் புதிய முனையங்கள் கட்டப்பட்டும், விரிவாக்கம் செய்யப்பட்டும் வந்தன. ஏற்கனவே உள்நாட்டு முனையம் முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரிலும், சர்வதேச முனையம் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பெயரிலும் பெயரிடப்பட்டிருந்தது. புது உள்நாட்டு முனையம் 2013ல் செயல்பட ஆரம்பித்தது.
விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து அறிஞர் அண்ணாவின் பெயர் சர்வதேச முனையத்திற்கு சூட்டப்பட்டது.
ஆனால் பழைய உள்நாட்டு முனையம் இரண்டு வருடங்களுக்கு முன்னால் (2018) ஒன்றிணைக்கப்பட்ட முனையங்களை உருவாக்குவதற்காக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இரண்டு வருடங்களாக கட்டப்பட்டு வரும் இந்த முனையத் திட்டம், வருட இறுதிக்குள் (2020) நிறைவடையும் எனக் கருதப்பட்டது.