வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த கடுமையான கிடுக்குப்பிடி - மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் விதிகள்!

Update: 2021-04-18 02:07 GMT

தீவிர சீர்திருத்த நடவடிக்கையாக, உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் உள்ள வெளிநாட்டு கொரோனா  தடுப்பூசிகளை கட்டுப்பாடுகளுடன் இந்தியாவில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு கடந்த 13ம் தேதி ஒப்புதல் அளித்தது.

இந்த முடிவால், வெளிநாட்டு கொவிட் தடுப்பூசிகளை, இந்தியா விரைவில் பெற உதவும். மேலும், கொவிட் தடுப்பூசிகள் உற்பத்தி திறனும் அதிகரிக்கும். இந்த வெளிநாட்டு கொவிட் தடுப்பூசிகளுக்கான ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை மத்திய அரசு  வெளியிட்டுள்ளது.

அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளுக்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களை மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வெளிநாட்டு தயாரிப்பாளர்கள் தங்களது விண்ணப்பங்களை இந்தியாவில் உள்ள துணை நிறுவனங்கள் அல்லது தங்களின் அங்கீகாரம் பெற்ற முகவர் முலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இதன் மீது 3 வேலை நாட்களில் முடிவெடுக்கப்படும். கீழ்கண்ட நிபந்தனைகளுடன், அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் வழங்குவார்.

தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் படி தடுப்பூசி பயன்படுத்தப்படும். வெளிநாட்டு தடுப்பூசிகளை போடும் முதல் 100 பயனாளிகள், பாதுகாப்பு காரணங்களுக்காக 7 நாட்களுக்கு கண்காணிக்கப்படுவர். அதன்பின்பே அந்த தடுப்பூசியை மேலும் தொடர அனுமதிக்கப்படும்.

அனுமதிக்கு பின்பான மருத்துவ பரிசோதனையை, அனுமதி பெற்ற 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரர் தொடங்க வேண்டும். விண்ணப்பதாரர் தாக்கல் செய்யும் பாதுகாப்பு தரவுகளை இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து, அந்த தடுப்பூசியை பயன்படுத்த அங்கீகாரம் வழங்கும்.

பரிசோதனை முடிவுகளை பெற்ற பிறகு, அவசரகால பயன்பாட்டுக்கு தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான அனுமதியை இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் ஆய்வு செய்வார்.

Similar News