கொரோனா நோயாளிகளுக்கு அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மீதான சுங்க வரி நீக்கம்!

Update: 2021-04-22 00:45 GMT

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டாலும் ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதற்கு 'ரெம்டெசிவிர்' ஊசி மருந்து செலுத்தப்படுகிறது.

மருந்து கடைகளில் இந்த 'ரெம்டெசிவிர்' மருந்து கிடைப்பதில்லை. சில கடைகளில் இந்த மருந்தை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை சொல்கிறார்கள்.

மருந்துகள் துறையின் பரிந்துரை மீதான உடனடி தேவையை கருத்தில் கொண்டு, ரெம்டெசிவிர் மீதான சுங்க வரியை வருவாய்த்துறை நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை நாட்டில் ரெம்டெசிவர் ஊசி கிடைப்பதை அதிகரிக்கும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டி. வி சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து பல்வேறு மருந்து நிறுவனங்கள், ரெம்டெசிவிரின் விலையை கணிசமாக குறைத்துள்ளன. கடிலா ஹெல்த்கேர் நிறுவனம், டாக்டர் ரெடீஸ் லேப் நிறுவனம், சிப்லா, மைலன், சைன்ஜின் இன்டர்நேஷனல், ஹீட்டரோ ஹெல்த்கேர் ஆகிய மருந்து நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்து விலையை குறைத்தன.

இந்நிலையில், கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரெம்டெசிவிர் மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசர கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அப்படி இருந்தும் இந்த மருந்துக்கு கடும் கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


Similar News