வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்திய பெண்களின் நலன் கருதி ஒன் ஸ்டாப் மையம்: மத்திய அரசு முடிவு!
இந்தியாவில் இருந்து வேலைக்காகவும் மற்றும் படிப்பிற்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைப்பது உறுதி செய்வதில் மத்திய அரசு தற்போது கவனம் செலுத்தியுள்ளது குறிப்பாக அங்கு செல்லும் பெண்கள் பலர் ஒப்பந்தப்படி உரிய வேலை கிடைக்காமலும், சம்பளம் வழங்கப்படாமலும், கொத்தடிமை முறையில் நடத்துவது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது மற்றும் வன்முறையால் பாதிக்கப்படுவது போன்ற பல துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
இவற்றை தடுப்பதற்காக வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களின் நலனுக்காக 9 நாடுகளில் 10 ஒன் ஸ்டாப் மையங்களை மத்திய அரசு திறக்க இருக்கிறது. இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்களில் இருந்து அவர்களை பாதுகாக்க, பல்வேறு நாடுகளிலும் ஒன் ஸ்டாப் மையங்களை தொடங்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது.
இதன்படி முதலில், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தலா ஒரு மையமும், சவுதி அரேபியாவில் 2 மையங்களும் என 9 நாடுகளில் 10 மையங்கள் திறக்கப்பட உள்ளன. அதன்பின்னர் பிற நாடுகளிலும் இந்த மையங்கள் திறக்கப்படும்.
மேலும் இது குறித்து மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் இந்த மையங்கள் அனைத்தும் மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் ஆதரவுடன் செயல்படும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு செயலாளர் ராம் மோகன் மிஷ்ரா தெரிவித்து உள்ளார்.
இந்த ஒன் ஸ்டாப் மையங்கள், வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் மனஅழுத்தத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி, சட்ட உதவி மற்றும் சட்ட ஆலோசனை, மனநல-சமூக ஆலோசனை மற்றும் தற்காலிக அடைக்கலம் வழங்குவது உள்ளிட்ட பல ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.