சென்ட்ரல் விஸ்டா திட்டம் நிறுத்த தடை மறுப்பு - உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு!
புதிய நாடாளுமன்ற கட்டிடம் உட்பட பல கட்டுமானங்களுக்கு தயாராகும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு தடை விதிக்குமாறு சென்ற மாதம் இறுதியில் தான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கை 31-ஆம் தேதி விசாரித்த, டெல்லி உயர் நீதிமன்றம், சென்ட்ரல் விஸ்டா திட்டம் என்பது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறியது. மேலும் அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் அங்கேயே தங்கியிருப்பதாலும், கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதாலும் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்க எந்தக் காரணமும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், இந்த மனு உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டதாக கூறிய டெல்லி உயர் நீதிமன்றம், மனுதாரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததும் உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கான கோடி செலவில் சென்ட்ரல் விஸ்டா திட்டம் செயல்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். எனவே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தற்பொழுது மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக உள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கிற்கு என்ன? தீர்ப்பு வழங்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சென்ட்ரல் விஸ்டா புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட பல கட்டிடங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய வளாகமாகும். இந்திய ஜனநாயகத்தின் மையப்புள்ளியாக இருக்கும் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 94 ஆண்டுகள் பழமையானது. சரித்திர மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டிடம் இந்தியாவின் ஒரு அடையாளமாக விளங்குகிறது. மேலும், மத்திய அமைச்சர்களுக்கான அலுவலகங்கள், பொது மத்திய செயலகங்கள் ஆகியவை அமைக்கும் பணிகளும் நடக்க இருக்கின்றன என்பதும் இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.