ஜம்மு விமானப்படை தளத்தில் 'ட்ரோன்' வெடிகுண்டு தாக்குதல் - பாதுகாப்பு அதிகாரிகள் படுகாயம்!

Update: 2021-06-28 09:53 GMT

ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஜம்மு நகரில், சத்வாரி என்ற இடத்தில் பயணியர் போக்குவரத்துக்கான விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜம்மு விமானப்படை தளத்தில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட 'ட்ரோன்' மூலம், பயங்காரவாதிகள்  நேற்று அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதில் அங்கு இருந்த இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.


ஜம்மு நகரில், சத்வாரி இடத்தில அமைந்துள்ள விமான நிலையத்தின் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை, நமது நாட்டு விமானப்படை கவனித்து வருகிறது. இதற்காக விமான நிலையத்திலேயே, நமது விமானப் படைக்கான தளம் அமைந்துள்ளது. அதிநவீன தகவல் தொழில்நுட்ப கருவிகள் அடங்கிய இந்த அலுவலகங்களுக்கு உயர்மட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. விமானப்படை தளம் அமைந்துள்ள ஒரு மாடி கட்டடத்தின் மேல்தள பகுதியில், நேற்று அதிகாலை 1:40 மணிக்கு "ட்ரோன்" எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் பறந்து வந்து, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது, கட்டடத்தின் கூரை பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது.இந்த ட்ரோன் வெடித்ததில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு விமானப்படை அதிகாரிகள் காயம் அடைந்தனர்.


இந்த சம்பவம் நடந்த 6 நிமிடங்களுக்கு பின், அதே கட்டடத்தின் தரைதள பகுதியில் மற்றொரு ட்ரோன் வெடித்து சிதறியது. இதில் யாருக்கும் எந்த காயமும்  ஏற்படவில்லை. "பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்களின் சதி செயலே, இந்த தாக்குதலுக்கு காரணம்." என்று ஜம்மு - காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து, ஜம்மு - காஷ்மீர் காவல் துறை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

Tags:    

Similar News