காஷ்மீர் ராணுவ முகாமில் பறந்த ட்ரோன்களை துப்பாக்கி சூடு நடத்தி விரட்டிய ராணுவம்!

Update: 2021-06-29 01:45 GMT

ஜம்மு - காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட 'ட்ரோன்' மூலம், பயங்காரவாதிகள் நேற்று அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர். ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மேலும் இரண்டு ட்ரோன்கள் ராணுவ பகுதியில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விமானப்படை தளம் அமைந்துள்ள ஒரு மாடி கட்டடத்தின் மேல்தள பகுதியில், நேற்று அதிகாலை 1:40 மணிக்கு "ட்ரோன்" எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் பறந்து வந்து, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

அப்போது, கட்டடத்தின் கூரை பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது.இந்த ட்ரோன் வெடித்ததில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு விமானப்படை அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த 6 நிமிடங்களுக்கு பின், அதே கட்டடத்தின் தரைதள பகுதியில் மற்றொரு ட்ரோன் வெடித்து சிதறியது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தே ட்ரோன்கள் அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது எல்லை தாண்டிய தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் ராணுவப் பகுதியில் மீண்டும் ட்ரோன்கள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உடனடியாக, உயர் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது. ட்ரோன்களை நோக்கி படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்தனர். இதன் மூலம் மிகப்பெரிய அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. 

Similar News