கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்ட பிளாச்சிமடா கிராமத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு 34 ஏக்கர் பரப்பளவில் கோகோ கோலா தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இப்படி அமைக்கப்பட்ட தொழிற்சாலை அதிகமாக நீர்வளத்தை சுரண்டுவதாகவும், அதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் போராட்டம் நடந்தது. இதனால் கடந்த 2004-ஆம் ஆண்டு இந்த ஆலை மூடப்பட்டது. இந்நிலையில், கோவிட் பெருந்தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளதால், அங்கு சிகிச்சை மையங்களுக்கான தேவை அதிகரித்தது.
எனவே கோகோ கோலாவின் மூடப்பட்ட நிலையில் உள்ள தொழிற்சாலையை, தற்காலிக கொரோனா சிகிச்சை மையமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு, கேரள அரசு கோரிக்கை வைத்தது. இதை கோகோ கோலா நிறுவனம் ஏற்றுக்கொண்டது. கேரளாவில் போராட்டத்திற்கு பின் மூடப்பட்ட தொழிற்சாலையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற கோகோ கோலா நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, அங்கு 600 படுக்கைகள் கொண்ட கொரோனா மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கேரள மின் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி கூறுகையில், "அரசின் கோரிக்கையை ஏற்று மூடியே கிடந்த தொழிற்சாலை கொரோனா மையமாக மாற்ற கோகோ கோலா நிறுவனம் அனுமதி வழங்கியது. அங்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 100 ஆக்சிஜன் படுக்கைகள், 10 வெண்டிலேட்டர்கள், 40 ICU படுக்கை வசதிகளும், குழந்தைகளுக்கான பத்து படுக்கை வசதிகள் உட்பட 550 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் வழி செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த தற்காலிக மருத்துவமனை இன்று முதல் மையம் செயல்பாட்டிற்கு வருகிறது" என அவர் கூறியுள்ளார்.