கொரோனாவால் குழந்தைகளுக்கு பயமும், பதட்டமும் அதிகரிக்கிறது: அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு!
தற்போது ஏற்பட்டுள்ள நோய் தொற்று காரணமாக பல்வேறு குழந்தைகள் தங்களுடைய இரண்டு வருடகாலமாக வீட்டிற்குள் இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் பள்ளிப்பருவம் முற்றிலும் பறிக்கப்பட்டு விட்டது என்றே கூறலாம். ஏனென்றால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது, அங்கு தங்களுடைய நண்பர்கள் மற்றும் அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் தற்போது குழந்தைகள் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடம் கற்கும் பொழுது அவர்களுக்கு பயமும், பதட்டமும் அதிகரிக்கிறது என்று அதிர்ச்சியூட்டும் ஒரு ஆய்வு முடிவு தகவல்களை வெளியிட்டுள்ளது.
எனவே இந்த காலகட்டத்தில் நோய் மீதான பயத்தின் காரணமாக சுமார் 22% குழந்தைகளும், பதற்றம் காரணமாக சுமார் 41% குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவர் ஷெலாஃபி குலாட்டி தலைமையில், "பெருந்தொற்றுக் காலத்தில் ஊரடங்கின்போதும் தனிமைப்படுத்தப் பட்டபோதும் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பராமரிப்பாளர்களின் உளவியல் மற்றும் நடத்தையில் ஏற்பட்ட தாக்கம்" என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 22,296 குழந்தைகள் மற்றும் வயதுவந்தோர் பங்கேற்றனர்.
அந்த ஆய்வின் முடிவில் கூறுகையில், 22% குழந்தைகளிடம் கொரோனா குறித்த பயம் ஏற்பட்டிருக்கிறது. எரிச்சல் மற்றும் கவனமின்மையால் 42.3% குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 34.5 சதவீதக் குழந்தைகளிடம் பதற்றம், கவலை, எரிச்சல், கவனமின்மை ஆகிய பிரச்சினைகளை கண்டுகொள்ள முடிகிறது. பதற்றத்தால் 41% குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர். மேலும் 35.2% மற்றும் 21.3% குழந்தைகள் முறையே சலிப்பு மற்றும் உறக்கத்தில் சிக்கலை எதிர்கொண்டனர்.