நீட்: தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு விளக்கம் அளித்த மத்திய கல்வி அமைச்சர்!

Update: 2021-07-16 02:42 GMT

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது நீட் தேர்விற்கான  முன்பதிவு துவங்கியுள்ளது. இவ்வாறு இருக்கையில் டில்லியில் உள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்திற்கு இந்த ஆண்டு நடக்கவிருக்கும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்குமாறு கோரிக்கை மனுவை மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.


இந்த கோரிக்கை மனுவிற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று என்னை நேரில் சந்தித்து நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தார். பின்னர் அவரிடம் நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்தேன். நீட் தேர்வில், பிராந்திய மொழிகளின் எண்ணிக்கை அதிகரித்தது குறித்தும் மலையாளம், பஞ்சாபி மொழிகளை சேர்த்தது குறித்தும் விளக்கினேன். அது மட்டுமின்றி நீட் தேர்வு ஏற்கனவே தமிழில் நடத்தப்படுகிறது என்றும் அவருக்கு தெரிவித்தேன்.


மேலும் தமிழக மாணவர்களின் நலனுக்காக விருதுநகர், திண்டுக்கல், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 4 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்பதையும் அவருக்கு தெரிவித்தேன். இதன் மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து உள்ளது, மேலும் தேர்வு நடத்தப்படும் மையங்களும் அதிகரிக்கப்படும்  எனவும் அவருக்கு விளக்கினேன்." என்று தர்மேந்திர பிரதான் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News