இந்தியப் பெருங்கடலில் இந்தியா - பிரிட்டன் கடற்படை கூட்டுப்பயிற்சி - சீனா ஷாக்!

Update: 2021-07-22 14:15 GMT

இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. குறிப்பாக, தெற்கு சீன கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. கடற்படையின் வலிமையை வெளிக்காட்டும் வகையில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சுமார் 40 நாடுகளுடன் தனித்தனியாகக் கூட்டுப்பயிற்சியை பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா - பிரிட்டன் கடற்படைகள் இடையேயான கூட்டுப்பயிற்சி இந்தியப் பெருங்கடல் பகுதியில் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.


இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் கூட்டு போர்ப்பயிற்சியில் பங்கேற்பதற்காக, பிரிட்டனின் மிக பிரமாண்டமான போர்க்கப்பலான 'HMS Queen Elizabeth' போா்க்கப்பல் இந்தியா வந்துள்ளது. அந்த போர்க்கப்பலில் ‛F 35B' போர் விமானங்களையும், 14 ஹெலிகாப்டர்களையும் நிறுத்த முடியும். அந்த போர்க்கப்பலுடன் சேர்த்து மேலும், பிரிட்டன் கடற்படையின் 6 கப்பல்களும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் இந்தியாவுக்கு வந்துள்ளன. கூட்டுப் பயிற்சியின்போது, பல்வேறு வகையான பயிற்சிகளை இந்தியா-பிரிட்டன் கடற்படை வீரர்கள் இணைந்து மேற்கொள்ள உள்ளனர்.


HMS Queen Elizabeth போா்க்கப்பலின் மூலமாக மேற்கொள்ளப்படும் கூட்டுப்பயிற்சியானது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த உதவும். மேலும் இந்த பயிற்சி மூலமாக இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள பாதுகாப்பு விவகாரத்தில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று பிரிட்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பிரிட்டன் உடன் நடக்கும் இந்தப் போர் பயிற்சியில் இந்தியாவின் ராஜ்புத் கப்பல் உள்ளிட்ட 12 போர்க்கப்பல்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட விமானங்களும் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News