காவேரி கூக்குரல் இயக்கத்தின் வெற்றி இந்தியா முழுவதும் பரவ வேண்டும் – ஜூஹி சாவ்லா பெருமிதம்!
"காவேரி கூக்குரல் இயக்கத்தின் முயற்சியால் 1,25,000 விவசாயிகள் மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாறி இருக்கின்றனர். அவர்களின் வருமானமும், விளைச்சலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மாபெரும் வெற்றி இந்தியா முழுவதும் பரவ வேண்டும்" என்று பாலிவுட் நடிகை திருமதி. ஜூஹி சாவ்லா தெரிவித்தார்.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் மரம்சார்ந்த விவசாயம் செய்து வரும் தமிழக விவசாயிகளை சந்திப்பதற்காக அவர் இன்று (பிப்ரவரி 1) ஈரோடு வந்தார். கோபிச்செட்டிப்பாளையம் மேவானி கிராமத்தில் நடந்த இந்நிகழ்வில் மரம்சார்ந்த விவசாயத்தால் தங்கள் வாழ்விலும், சுற்றுச்சூழலிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவசாயிகள் ஜூஹி சாவ்லா அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிறகு சாவ்லா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் இங்கு வந்து விவசாயிகளை சந்தித்து பேசுவதற்கு முன்பு இவ்வியக்கத்தின் மூலம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் குறித்த 'எண்ணிக்கை' அடிப்படையிலான தகவல்கள் தான் எனக்கு தெரியும். ஆனால், விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிறகு தான் அவர்களின் வாழ்விலும், சுற்றுச்சூழலிலும் நடந்துள்ள ஏராளமான மாற்றங்கள் குறித்து தெரிந்து கொண்டேன். பல தகவல்கள் ஆச்சரியமூட்டும் வகையிலும், மகிழ்ச்சியூட்டும் வகையிலும் இருந்தது.
வறட்சியாலும், குடும்ப சூழல்களாலும் நிலத்தை விற்க முடிவு எடுத்த விவசாயிகள் கூட காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனர். அவர்களுக்கு புது நம்பிக்கை கிடைத்துள்ளது. பல விவசாயிகளின் வருமானமும், விளைச்சலும் பல மடங்கு அதிகரித்து இருப்பதை அறிந்து கொண்ட போது மகிழ்ச்சியாக உள்ளது. பொருளாதாரம் மட்டுமின்றி நிலத்தின் மண் வளமும் நன்கு மேம்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இத்தகைய அற்புதமான மாற்றங்கள் நிகழ்வதற்கு காரணமாக இருக்கும் சத்குரு அவர்களுக்கும், ஈஷா தன்னார்வலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். விவசாயிகளின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்த பிறகு சத்குரு மீதான மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.