சாம்பல், சணல் நார் சாலை அமைக்க முடியுமா? பசுமை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் வேற லெவல் பிளான் போட்டிருக்கும் மத்திய அரசு!

Update: 2023-03-16 01:24 GMT

உலக வங்கி நிதியுதவியுடன் நான்கு மாநிலங்களில் பசுமை தேசிய நெடுஞ்சாலை சரக்குப் போக்குவரத்துத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 781 கிலோ மீட்டர் தூரத்திற்கான பசுமை தேசிய நெடுஞ்சாலை சரக்குப்போக்குவரத்துத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு 1288.24 மில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் ரூ.7,662.47 கோடி. இதில் உலக வங்கியின் கடன் உதவி 500 மில்லியன் டாலர் என்றும் அமைச்சர் கூறினார்.

சுண்ணாம்பு, சாம்பல், பிளாஸ்டிக் கழிவு, கோகோ, சணல் நார் போன்ற உள்ளூர் பயன்பாட்டுப் பொருட்களையும், இயற்கை பொருட்களையும் பயன்படுத்தி சாலைகள் அமைப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும், போக்குவரத்துத் துறையில் கார்பன் உமிழ்வைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கேசோலைனுடன் எத்தனாலை கலத்தல், டீசல் வாகனங்களுக்கான எத்தனால் கலப்பு, பயோ டீசல், பயோ-சிஎன்ஜி, திரவமயமாக்கப்பட்ட இயற்கை வாயு, மெத்தனால், இரட்டை எரிபொருள், டி-மித்தேல் ஈதர், ஹைட்ரஜன் பேட்டரி வாகனம், ஹைட்ரஜன் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களை அறிமுகப்படுத்தி உமிழ்வை மட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மத்திய- மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள பழைய வாகனங்களை புதுப்பிப்பதை ரத்து செய்யும் அறிவிக்கையும் இதில் அடங்கும்.

Input From: swarajya


Similar News