சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு வாபஸ்: மத்திய அரசு அறிவிப்பு.!

Update: 2021-04-01 11:33 GMT

பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக வெளியான அறிவிப்பு திரும்பப்பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஏப்ரல் 1ம் தேதி முதல், வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4% ல் இருந்து 3.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 7.1% ல் இருந்து 6.4% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


 மேலும் ஓராண்டுக்கான வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



 இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசாங்கத்தில் அனைத்து சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் ஏற்கெனவே 2020 2021 கடைசிக் காலாண்டில் இருந்த விகிதத்திலேயே தொடரும். நேற்றிரவு வெளியிடப்பட்ட புதிய வட்டி விகித அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

Similar News