நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: பிரதமர்க்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம்!
இந்தியாவில் குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. மக்கள் அனைவரும் தகுந்த பாதுகாப்பு இல்லாமலும் மற்றும் தடுப்பூசி போடுவதன் விழிப்புணர்வு இல்லாமலும் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய ஒரு விஷயம்தான். நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழ்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட அனுமதி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே படிப்படியாக உயர்ந்து வந்த கொரோனா, நேற்று ஒருநாள் பாதிப்பில் புதிய உச்சத்தை தொட்டது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியும் விரைவு படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது. அதில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை உடனடியாக விரைவு படுத்த வேண்டும் எனவும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் வரும் 8ம் தேதி மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.