இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு: மீண்டும் முதலிடத்தில் இவர்தான்!
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 2021ம் ஆண்டிற்கான இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரபலமான போர்ப்ஸ் பத்திரிகை 35வது ஆண்டாக உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலகளவில் கோடீஸ்வரராக அமேசான் CEO ஜெப் பெசாஸ் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் 151 பில்லியன் டாலருடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் உள்ளார்.
இவரின் டெஸ்லா நிறுவன பங்குகள் கடந்தாண்டை விட 705 சதவீதம் அதிகரித்ததே இவரின் சொத்து மதிப்பு உயர காரணமாக கூறப்படுகிறது. இந்திய அளவில் பெரும் கோடீஸ்வரராக ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்தார். கடந்தாண்டு சீனாவின் ஜாக் மா இருந்த நிலையில், அந்த இடத்தை அம்பானி பெற்றுள்ளார். சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாம் இடத்தில் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி உள்ளார். அதானி கிரீன், அதானி என்டர்பிரைசஸ் ஆகிய அவரது நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்ததால், அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. HCL நிறுவனர் ஷிவ் நாடார் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்திலும், அவன்யூ சூப்பர்மார்க்கெட் அதிபர் ராதாகிஷண் தமானி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 4 ஆம் இடத்திலும் உள்ளனர். 5ம் இடத்தில் கோடக் மஹிந்திரா தலைவர் உதய் கோடக் உள்ளார்.