தடுப்பூசி திருவிழா: தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பிரதமர் அறிவுறுத்தல்!
பிரதமர் நரேந்திர மோடி முதல்வர்களுடனான கூட்டத்தில் உரையாற்றினார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பொதுமக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அப்போது, அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மாநிலங்களுடன் நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, ஏப்ரல் 11-14 முதல் 'டிக்கா உட்சவ்'(தடுப்பூசி திருவிழா) அனுசரிக்கவும், முடிந்தவரை தகுதியான மக்கள் அனைவரும் தடுப்பூசி போடவும் கேட்டுக்கொண்டார்.
முதல்வர்களுடனான மறுஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பேசிய பிரதமர் மோடி, "ஜோதிபா பூலே பிறந்த தேதியான ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14 வரை டிக்கா உட்சவ் கொண்டாடுவோம். ஏப்ரல் 14 பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்த தேதியாகும். ஏப்ரல் 11- 14 முதல் டிக்கா உட்சவ் சமயத்தில் முடிந்த அளவு தகுதியான நபர்களுக்கு தடுப்பூசி போடுங்கள். டிக்கா உட்சவ்வின் போது அதிகபட்ச மக்களுக்கு தடுப்பூசி போடுவதை நாம் நோக்கமாகக் கொள்ள வேண்டும்" என்று பிரதமர் மேலும் கூறினார்.
45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட உதவுமாறு நாட்டின் இளைஞர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். நமது முக்கியத்துவம் இப்போது சோதனை, தடமறிதல், சிகிச்சை, பொருத்தமான நடத்தை மற்றும் கொரோனா மேலாண்மை ஆகியவற்றில் இருக்க வேண்டும் என மோடி மேலும் வலியுறுத்தினார்.