கொரோனா இரண்டாவது அலை - இரயில் பயணத்தில் மாற்றியமைக்கப்படும் பாதுகாப்பு நெறிமுறைகள் என்னென்ன?
தெற்கு ரயில்வே நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது. தற்போது, 75 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட முன்பதிவு செய்யப்பட்ட மெயில், எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களை இயக்குவதோடு, தெற்கு ரயில்வே சென்னை புறநகர் சேவைகளையும் இயக்குகிறது.
நடப்பு ஆண்டில் இரண்டாவது கொரோனா அலை மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் சவால்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அரசாங்க நெறிமுறைப்படி தகுதி வாய்ந்த அனைத்து குடிமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
பாதுகாப்பான பயணத்திற்கு கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுமாறு தெற்கு ரயில்வே, ரயில் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
1. முகமூடிகள் அணிவது, சமூக விலகல் மற்றும் கை சுகாதாரம் போன்ற அடிப்படை கொவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்
2. தேவையற்ற பயணம் மற்றும் குழுக்களாக பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.
3. கவுண்டர்கள் மற்றும் தளங்களில் சமூக தூரத்தைப் பராமரிக்கவும்.
4. காய்ச்சல், இருமல், சளி போன்ற கொவிட் அறிகுறிகள் இருந்தால் பயணத்தைத் தவிர்க்கவும்.
5. நீங்கள் கொவிட் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பவரானால் அல்லதுதனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டால் அல்லது வைரஸுக்கு பாஸிடிவ் ஆக சோதிக்கப்பட்டால் பயணத்தைத் தவிர்க்கவும்.
6. கை சுத்திகரிப்பு, சோப்பு போன்ற கொவிட் பாதுகாப்பு கருவிகள் ,உணவு, நீர் போன்றவற்றை பயணத்தின் போது எடுத்துச் செல்லவும்.
7. தயவுசெய்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் அசுத்தமான அல்லது சுகாதாரமற்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்.