உலகில் எங்கு பேரிடர் வந்தாலும் இந்தியாவை தான் கூப்பிடறாங்க: சர்வதேச அளவில் கிடைத்த உச்ச கௌரவம்!

Update: 2023-03-15 03:36 GMT

உலகளவில் மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் கைகொடுத்து உதவும் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌஹான் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிலரங்கில் காணொலிக் காட்சியின் வாயிலாக அவர் உரையாற்றினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிலரங்கில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் சபாநாயகர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

உலகம் ஒரே குடும்பம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மனிதநேய உதவி, பேரிடர் நிவாரணப் பணிகளில் இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளதாக ஜெனரல் அனில் சௌஹான் கூறினார்.

நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது ஆபரேஷன் மைத்திரி மூலம் மீட்பு நடவடிக்கைகள், 2016ம் ஆண்டு ஏற்பட்ட புயலின் தாக்குதலின் போது இலங்கைக்கு உதவி, 2018ம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது இந்தோனேஷியாவுக்கு உதவி, 2020ம் ஆண்டு மடகாஸ்கரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது உதவி, கொவிட் பெருந்தொற்றின் போது தடுப்பூசிகள் விநியோகம் உள்ளிட்ட உதவிகளை இந்தியா அளித்ததாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் தோஸ்த்’ நடவடிக்கை மூலம் உலகின் எந்த முனையிலும் இந்தியாவால் உதவ முடியும் என்பது நிரூபமானது எனக்கூறினார். 

Input From: Hindu


Similar News