மகாராஷ்டிராவில் கொரோனாவிலிருந்து மீண்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மியூகோமிகோசிஸ் பாதிப்பு - மத்திய அரசின் அவசர எச்சரிக்கை!
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க நாம் சிறந்த முயற்சிகள் எடுத்தாலும், தற்போது, மியூகோமிகோசிஸ் என்ற பூஞ்சை தொற்று காரணமாக மற்றொரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொண்டு, அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மகாராஷ்டிராவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மியூகோமிகோசிஸ் பாதிப்பு இருப்பதாக, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். இதற்கு 10 பேர் பலியாகியுள்ளனர். பல நோயாளிகள் பார்வை இழந்துள்ளனர்.
மியூகோமிகோசிஸ் பாதிப்புக்கு என்ன காரணம்?
மியூகோமிகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை பாதிப்பு, பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் பூஞ்சை வித்துக்களுடன் தொடர்பு ஏற்படுபவர்களுக்கு இந்த மியூகோமிகோசிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பூஞ்சை தொற்று தோலில் உள்ள காயங்கள் மூலம் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைபவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடம் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. நிரிழிவு நோயாளிகளுக்கு, எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட ஆலோசனைப்படி, கொவிட்-19 நோயாளிகளில் கீழ்கண்ட நிலையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு மியூகோமிகோசிஸ் பாதிப்பு அபாயம் அதிகம்.
கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்து பயன்பாடு காரணமாக எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நீண்ட நாட்களாக ஐசியு-ல் இருந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள், புற்றுநோய், தீவிர பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்கள் போன்றோர்.