கொரோனாவின் 2-வது அலை அதிகரிக்க காரணம் இதுதான் - எய்ம்ஸ் இயக்குநர் தகவல்!

Update: 2021-04-12 11:51 GMT

கொரோனாவுக்கு பொருத்தமான நடத்தையை மக்கள் புறக்கணிப்பது நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் திடீரென அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார். எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா, "பாதிப்புகள் திடீரென அதிகரித்ததற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஜனவரி-பிப்ரவரி மாதங்களில், பாதிப்புகள் குறையத் தொடங்கியபோது, கொரோனா வைரஸ் இப்போது வெளியேறிவிட்டது என்று நினைத்தபடி மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதைக் குறைத்தனர். இது பாதிப்புகளின் கூர்மையான உயர்வுக்கு முக்கிய காரணம்" என்று கூறினார்.


கொரோனாவின் பிரிட்டன் வகை மாறுபாடு வேகமாக பரவுவது மற்றொரு காரணம் எனக் கூறிய அவர், பஞ்சாபில் பெரும்பாலான தொற்றுகள் இந்த மாறுபாட்டைக் கொண்டவை என்று கூறினார். கொரோனா இறப்பு விகிதம் குறித்து பேசிய குலேரியா, "கொரோனா பாதிப்புகளின் கடைசி அலைகளுடன் ஒப்பிடும்போது இரண்டாவது அலைகளில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது என்று கூற எந்த தகவலும் இல்லை என்றார். மருத்துவமனை உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ ஊழியர்கள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். வைரஸ் பரவுவதை நிர்வகிக்க உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார்.


ஊரடங்கு குறித்து கருத்து தெரிவித்த எய்ம்ஸ் இயக்குனர், "தேசிய அளவில் ஊரடங்கு தேவையில்லை. சோதனை, தடமறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவற்றை நாம் மையமாக கொண்டு செயல்பட வேண்டும்" என்றார். தடுப்பூசிகளின் செயல்திறனைப் பற்றி குறிப்பிட்ட குலேரியா, "தடுப்பூசி உங்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்காது. இது கடுமையான தொற்று மற்றும் மருத்துவமனையில் சேருவதைத் தடுக்கும். முககவசத்தை அணிந்துகொள்வதும் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் மிக முக்கியமானது என்றார். மூத்த குடிமக்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்ற உயர் ஆபத்து உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி உற்பத்தி என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். இன்னும் சில தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைத்தவுடன், மற்ற வயதினருக்கும் தடுப்பூசி வழங்கப்படலாம்" என்று அவர் கூறினார்.

Similar News