'கோவின்' செயலியை பெற 50 நாடுகள் விருப்பம் - இலவசமாக வழங்க பிரதமர் மோடி உத்தரவு!

Update: 2021-06-29 12:01 GMT

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக 'கோவின்' என்ற வலைத்தளம் மற்றும் செயலியை மத்திய அரசு உருவாக்கியது. இந்த வலைத்தளத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பெயரை முன்பதிவு செய்யும் வசதியும் மேலும் அந்த முன்பதிவை நீக்கும் வசதியும் அமைந்துள்ளது. கொரோனா தடுப்பூசியின் கையிருப்பு தகவல்  மற்றும் வினியோகம் உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதில், ஒருவருக்கு தடுப்பூசி போடுவதற்கான நாள், நேரம் மற்றும் இடம் ஆகியவை ஒதுக்கப்படும், அந்த ஒதுக்கப்பட்ட நேரத்தில் நாம் சென்று நமக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம். அதே போல் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு அதற்கான சான்றிதழையும் அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நிலையில், 'கோவின்' போன்ற வலைத்தளத்தை பெற 50 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.


டெல்லியில், இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் பொது சுகாதார மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தது. இதில் கலந்துக் கொண்ட கொரோனா தடுப்பூசி திட்ட குழுவின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ்.சர்மா பேசுகையில் "130 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவது எளிதான காரியம் அல்ல. ஆனால், 'கோவின்' வலைத்தளத்தை உருவாக்கியதன் மூலம் அதை இந்தியா சாத்தியம் ஆக்கி இருக்கிறது. இந்த வலைத்தளம் தொடங்கப்பட்ட 5 மாதங்களில், 30 கோடிக்கு மேற்பட்ட பதிவுகளை அது கையாண்டுள்ளது. 'கோவின்' மிகவும் பிரபலம் ஆகிவிட்டது.


'கோவின்' போன்ற வலைத்தளத்தை பெற சுமார் 50 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. மத்திய ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகியவற்றை சேர்ந்த நாடுகளும், கனடா, மெக்சிகோ, பனாமா, பெரு, அஜர்பைஜான், உக்ரைன், நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளும் இந்த விருப்பத்தை தெரிவித்துள்ளன. அந்த நாடுகளிடம் 'கோவின்' எப்படி செயல்படுகிறது என்பதை கூறி வருகிறோம். அதன் மூலவடிவ மென்பொருளை உருவாக்கி, அதை அந்த நாடுகளுக்கு இலவசமாக கொடுக்குமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். அதன்படி, நாங்கள் இலவசமாக அளிப்போம்." என்று  அவர் பேசினார்.

Tags:    

Similar News