இலவசமாக ஒரு நாளைக்கு 700 டன் ஆக்சிஜன் சப்ளை: கலக்கும் ரிலையன்ஸ் நிறுவனம்!
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒரு நாளைக்கு 700 டன்களுக்கும் அதிகமான மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்காக உற்பத்தி கட்டமைப்பை மாற்றியுள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் அனைத்து மருத்துவ தர ஆக்சிஜன்களும் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆரம்பத்தில் 100 டன் மருத்துவ தர ஆக்சிஜனை உற்பத்தி செய்தன. இது மிக விரைவாக தற்போது 700 டன்களுக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் தினமும் 70,000'க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கும். மருத்துவ தர ஆக்ஸிஜன் உற்பத்தி திறனை 1,000 டன்னாக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் விரைவான எழுச்சி காரணமாக ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்து வருவதால், ரிலையன்ஸ் நாட்டிற்கு இக்கட்டான நேரத்தில் சேவையளிக்கும் வகையில், இதற்கான கருவிகளை நிறுவி மருத்துவ தர ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வழங்குவதற்கான செயல்முறைகளை அமைத்துள்ளது.
அங்கு மருத்துவ தர ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய தொழில்துறை ஆக்ஸிஜன் திருப்பி விடப்படுவது குறிப்பிடத்தக்கது. குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவரும், ரிலையன்ஸ் புரமோட்டர்களின் நெருங்கிய கூட்டாளியுமான தன்ராஜ் நாத்வானி ஒரு ட்வீட்டில், "ரிலையன்ஸ் ஜாம்நகரால் தினசரி 400 டன் ஆக்ஸிஜன் குஜராத்துக்கு வழங்கப்படுகிறது. இது குஜராத்துக்கான எங்கள் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது." எனத் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தை குஜராத்தின் ஜாம்நகரில் ரிலையன்ஸ் இயக்குவது குறிப்பிடத்தக்கது.