இங்கிலாந்தில் இருந்து பெங்களூரு வந்த 151 பேர் ‘சுவிட்ச் ஆப்’.. மாயமானவர்களை தேடும் பணியில் சுகாதாரத்துறை.!

இங்கிலாந்தில் இருந்து பெங்களூரு வந்த 151 பேர் ‘சுவிட்ச் ஆப்’.. மாயமானவர்களை தேடும் பணியில் சுகாதாரத்துறை.!

Update: 2020-12-27 16:17 GMT

சீனாவில் உள்ள வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது. அந்த வைரசின் தாக்கம் சற்று குறைய தொடங்கியுள்ளது. மேலும் கொரோனாவுக்கு மருந்தும் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை கொரோனா வைரஸாக பரவி வருகிறது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தற்போது 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது. இதனால் புதிய வைரஸ் தங்கள் நாட்டுக்குள் வராமல் தடுக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இங்கிலாந்துக்கான விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த நவம்பர் 25-ம் தேதிக்கு பிறகு இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் யார் யார் என்று கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதியில் இருந்து கடந்த 22-ம் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து 2,500 பேர் வந்துள்ளனர்.

அவர்களில் 1,638 பேரை சுகாதாரத்துறையினர் கண்டுப்பிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அவர்களுக்கு உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. அந்த 14 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் தான் அது என்ன வைரஸ் என தெரியவரும்.

இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 151 பேர் எங்கு சென்றனர் என்பது இதுவரை தெரியவில்லை. அவர்களில் பெரும்பாலோனார் தங்களின் செல்போனை ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் சுற்றுலா சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் எங்கு சென்றார்கள் என்பன பற்றி அவர்களின் உறவினர்கள் மற்றும் அருகாமையில் வசிக்கின்ற மக்களிடம் அதிகாரிகள் விசாரிக்க தொடங்கியுள்ளனர். அவர்களை கண்டறிய முடியாமல் சுகாதாரத்துறையினர் தற்போது திணறி வருகிறார்கள். மேலும், அவர்கள் எங்கு சென்றார்கள் என்பன பற்றி தீவிரமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Similar News