2019 - 20ம் ஆண்டுக்கான பி.எப்., வட்டி விரைவில் வரவு வைக்கப்படும்.. மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்.!

2019 - 20ம் ஆண்டுக்கான பி.எப்., வட்டி விரைவில் வரவு வைக்கப்படும்.. மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்.!

Update: 2021-01-01 08:26 GMT

2019 20-ம் ஆண்டுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டியை 8.5 சதவீதம் வரவு வைக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் தந்திருப்பதால், தொழிலாளர் அமைச்சகம் விரைவில் இதனை அமல்படுத்தும்.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 6 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சந்தாதாரர்களாக உள்ளனர். மாதம் தோறும் ஊழியரும், நிறுவனமும் இணைந்து அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 25 சதவீதம் தொகையை இ.பி.எப்.ஒ.,விற்கு அளிக்கின்றது.

நிறுவனத்தின் 12 சதவீதம் பங்களிப்பில், 8.33 சதவீதம் தொகை ஓய்வூதிய கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்காக ஒவ்வொரு நிதி ஆண்டும் வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு 8.5 சதவீதமாக வட்டி நிர்ணயிக்கப்பட்டது. இதில் 8.15 சதவீதம் வட்டி ஒரு தவனையாகவும், 0.35 சதவீதம் வட்டியை மற்றொரு தவனையாகவும் செலுத்த இருந்தனர். பின்னர் முழுமையாகவே செலுத்திட தொழிலாளர்கள் அமைச்சகம் முடிவு செய்தது. இதற்கு நிதி அமைச்சகம் முறையான ஒப்புதல் வழங்கியது.

விரைவில் தொழிலாளர் அமைச்சகம் இதனை அரசாணையில் வெளியிட உள்ளது. அதனைத் தொடர்ந்து பி.எப்., மீதான வட்டி விகிதத்தை சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைப்பதற்கான வழிமுறைகள் தொடங்கும்.

இ.பி.எப்.ஓ., தளத்தில் பதிவு செய்துள்ள உங்களின் மொபைல் எண்ணிலிருந்து 011- 22901406 என்ற எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்தால், பண இருப்பு விவரங்கள், யு.ஏ.என்., எண்ணுடன் குறுஞ்செய்தியாக வந்துவிடும். மேலும் இ.பி.எப்.ஓ., இணையதளம் மூலம் விரிவான பாஸ்புக்கை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
 

Similar News