விதிகளை மீறி செயல்பட்ட அமேசான் நிறுவனத்திற்கு அபராதம்.. மத்திய அரசு உத்தரவு.!
விதிகளை மீறி செயல்பட்ட அமேசான் நிறுவனத்திற்கு அபராதம்.. மத்திய அரசு உத்தரவு.!
விற்பனை செய்யப்படும் பொருட்களில், அவை எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறித்த தகவலை தெரிவிக்கவில்லை என்று அமேசான் நிறுவனத்துக்கு மத்திய அரசு அபராதம் விதித்துள்ளது.
ஆன்லைன் வர்த்தக தளத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களில், விலை மற்றும் பொருட்களின் விபரம் உள்ளிட்டவற்றை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும். மேலும், அவை எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இது குறித்து, ‘அமேசான் மற்றும் பிளிப்கார்ட்’ ஆகிய நிறுவனங்களுக்கு, கடந்த மாதம் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம், ‘நோட்டீஸ்’ அனுப்பியிருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது, பெங்களூரைச் சேர்ந்த, அமேசான் விற்பனையாளர் சேவைகள் நிறுவனத்திற்கும், அதன் ஒவ்வொரு இயக்குனர்களுக்கும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சில விற்பனையாளர்கள், தங்களுடைய வர்த்தக தளத்தில் இத்தகைய தகவல்களை தெரிவிக்க வில்லை என கூறி, குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டது அமேசான். இதையடுத்து, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விதிமீறல்கள் குறித்து அனுப்பப்படும் நோட்டீசுக்கு, திருப்தி அளிக்கும் விதத்தில் பதிலளிக்கப்படாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.