இனி தமிழகத்தில் வர்த்தகம் எளிது! இந்தியாவிலேயே அதிக நிதி பெறப்போகும் மாநிலங்கள் லிஸ்டில் டாப்!

இனி தமிழகத்தில் வர்த்தகம் எளிது! இந்தியாவிலேயே அதிக நிதி பெறப்போகும் மாநிலங்கள் லிஸ்டில் டாப்!

Update: 2020-12-23 09:45 GMT

எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக இதுவரை தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த மாநிலங்களுக்குக் கூடுதலாக ரூ.16,728 கோடி நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த 5 மாநிலங்களும், எளிதாகத் தொழில் தொடங்குவதற்கான சீரமைப்பு விதிகளைத் தங்கள் மாநிலங்களில் முழுமையாகச் செயல்படுத்தியதையடுத்து இந்த அனுமதி தரப்பட்டுள்ளது.

மக்கள் மைய சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்கள் கூடுதல் கடன் பெறலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான சீர்திருத்தங்களை ஏற்படுத்த மாநிலங்களை ஊக்குவித்துள்ளது. இதன்படி தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் எளிதான வர்த்தகம் தொடர்பான சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளன.

இதனால் கூடுதல் நிதியாக தமிழகத்திற்கு ரூ.‌4,813 கோடியும், ஆந்திரப்பிரதேசத்திற்கு ரூ. 2,525 கோடியும் , கர்நாடகாவிற்கு ரூ. 4,509  கோடியும், மத்தியப்பிரதேசத்திற்கு ரூ. 2,373 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ. 2,508 கோடியும் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் மாநிலப் பொருளாதாரத்தில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்பதால் இது தொடர்பாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் மாநிலங்களுக்குக் கூடுதல் கடன் வழங்கப்படும் என்று கடந்த மே மாதம் மத்திய அரசு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ் பாதிப்பையடுத்து, மாநில அரசுகள் கூடுதல் நிதித் தேவையை நிறைவு செய்யக் கடந்த மே மாதம் மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி மாநில அரசுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மையில் 3 சதவீதம் கடன் பெற அனுமதியளிக்கப்பட்டது.

ஆனால், அதற்கு மாநில அரசுகள், ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு, எளிதாக வர்த்தகம் செய்யும் சீரமைப்பு விதிகள், நகர உள்ளாட்சி சீர்திருத்தம், மின்துறை சீர்திருத்தத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதுவரை 10 மாநிலங்கள் ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு திட்டத்தையும், 5 மாநிலங்கள் எளிதாகத் தொழில் செய்யும் சீரமைப்பு விதிகளையும், 2 மாநில அரசுகள், உள்ளாட்சி சீர்திருத்தங்களையும் செய்து முடித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News