இந்தியாவின் தேசிய கல்வி கொள்கைக்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் பாராட்டு!
இந்தியாவின் தேசிய கல்வி கொள்கைக்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் பாராட்டு!
இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கை 2020 சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இருக்கும் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020, நம் நாட்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அபிலாஷைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை என்பது பள்ளிகளுக்கு அப்பாற்பட்டது. மாணவர்களைப் புத்தகப் பையின் சுமையிலிருந்து விடுவித்து வாழ்கைக்கு உதவும் வகையில் கற்பிக்கும். வெறுமனே மனப்பாடம் செய்வதிலிருந்து விலகி மாணவர்களை விமர்சன சிந்தனைக்கு மாற்றும்.
இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, திரு அரபிந்தோ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த முதலீடு இல்லா அடிப்படை கற்றலை புதிய முறையில் வழங்குவதை ஊக்குவிப்பது தொடர்பான தேசிய கருத்தரங்கை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
திறமையான தலைமை பண்பிற்காக 40 கல்வி அதிகாரிகளையும், கொரோனா பெருந்தொற்றின்போது புதுமை வழிமுறைகளை பின்பற்றி கற்பித்த 26 ஆசிரியர்களையும் மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் கௌரவித்தார். மேலும் தொடரின்போது கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றிய புதுமையான செயல்முறைகள் அடங்கிய மின் புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, தேசிய கல்வி கொள்கை 2020, நாட்டின் கல்வி வரலாற்றின் விரிவான மற்றும் எதிர் காலத்திற்கு உகந்த ஆவணமாக திகழ்வதாக தெரிவித்தார். குழந்தைகளிடையே போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி, திறமை மற்றும் நுண் சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கை புதிய இந்தியாவுக்கான அடித்தளமாக அமைவதாக அவர் குறிப்பிட்டார்.
உலகின் முன்னணி பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கல்விக்கான மேலாண் இயக்குனர் ராட் ஸ்மித், இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கையை வெகுவாக பாராட்டியதோடு கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டு, அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்கிற்கு’ பாராட்டுகளைத் தெரிவித்தார்.