மின் கட்டணத்தில் ₹5,210 கோடி சேமித்த மத்திய அரசின் திட்டம் - 5.29 மில்லியன் டன் கார்பன்டை ஆக்சைடு உமிழ்வு தடுப்பு!

மின் கட்டணத்தில் ₹5,210 கோடி சேமித்த மத்திய அரசின் திட்டம் - 5.29 மில்லியன் டன் கார்பன்டை ஆக்சைடு உமிழ்வு தடுப்பு!

Update: 2021-01-08 08:29 GMT
உஜாலா எனப்படும் அனைவருக்கும் எல்.இ.டி பல்புகள் வழங்கும் திட்டம், தேசிய தெருவிளக்கு திட்டம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்கள் தற்போது 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன.

இந்த இரு திட்டங்களையும், மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனம் அமல்படுத்தியது. உஜாலா திட்டத்தின் கீழ், நாடு முழுவதம் 36.69 கோடி எல்.இ.டி பல்புகளை இஇஎஸ்எல் நிறுவனம் வழங்கியது.

இதன் மூலம் ஆண்டுக்கு 47.65 பில்லியன் கிலோ வாட் மின்சாரம் சேமிப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 38.59 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றமும் குறைந்துள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர 72 லட்சம் எல்.இ.டி ட்யூப் லைட்டுகள், 23 லட்சத்துக்கும் மேற்பட்ட குறைந்த மின்சாரத்தில் இயங்கும் மின்விசிறிகளும் இத்திட்டத்தின் கீழ் மலிவு விலையில் வழங்கப்பட்டன. தேசிய தெருவிளக்கு திட்டம் மூலம் நாடு முழுவதும், 1.14 கோடி எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன.

இதன் மூலம் ஆண்டுக்கு 7.67 பில்லியன் கிலோ வாட் மின்சாரம் சேமிக்கப்பட்டதாகவும், ஆண்டுக்கு 5.29 மில்லியன் டன்கள் கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம் குறைக்கப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டது.

இதன் மூலம் நகராட்சிகளின் மின் கட்டணத்தில் ₹5,210 கோடி சேமிப்பு ஏற்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இலக்குகளை அடைந்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ள மத்திய மின்சக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் "உஜாலா, தெரு விளக்குத் திட்டம் ஆகியவை சமூகப் பொருளாதார மாற்றத்தில் மையமாக உள்ளன.

அவை கார்பன் உமிழ்வை  குறைத்தது, ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டும் அல்லாமல்,  நாடு முழுவதும் வீட்டு விளக்குகள், தெரு விளக்குகள் அமைப்பையும் மாற்றியமைத்துள்ளன.  

இத்திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தி, இந்திய மின்சக்தித் துறையின் மாற்றத்தில் 6 ஆண்டுகள் நிறைவு செய்ததற்காக இஇஎஸ்எல் நிறுவனத்தை நான் வாழ்த்துகிறேன்.’’ என்றார். 

Similar News