மேற்கு வங்காளத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாகிவிட்டது: ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர காங்கிரஸ் கடிதம்!

Update: 2022-03-24 03:11 GMT

மேற்கு வங்காளத்தில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறை சம்பவம் பற்றி காங்கிரஸ் கட்சி தலைவரும் எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உடனடியாக இந்திய அரசியலமைப்பின் 355வது பிரிவை பயன்படுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மேற்கு வங்க அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். கடந்த மார்ச் 21ம் தேதி பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுய் கிராமத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. அதில் பாது ஷேக் என்பவர் கொல்லப்பட்டார்.

இதற்கு எதிர்வினையாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிலர் தீ வைத்துள்ளனர். இதில் பெண்கள், குழந்தைகள் என்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்து விட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 26 அரசியல் கொலைகள் அரங்கேறியுள்ளது. எனவே மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் 355 பிரிவை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

Source: ANI

Image Courtesy: The New Indian Express

Tags:    

Similar News