ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்.. எப்படி இயங்கும்? என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா.?

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்.. எப்படி இயங்கும்? என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா.?

Update: 2020-12-29 19:49 GMT

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவையை பிரதமர் மோடி டெல்லியில் துவக்கி வைத்தார். இந்தியாவில் முதன் முறையாக இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இந்த ரயில் இயக்கப்படும் எனவும் பிரதமர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இது போன்ற ஓட்டுநர் இல்லாத ரயில் எப்படி இயங்கும் என்பதை பார்ப்போம்.

ரயில் புறப்படுவது, இரண்டு நிலையங்களுக்கு இடையிலான ரயிலின் இயக்கம், அவசர காலங்களில் ரயிலை நிறுத்துவது, கதவுகளை திறப்பது, மூடுவது என அனைத்தும் தானியங்கி முறையில் நடைபெறும்.

சிபிசிடி எனப்படும் தொலைத்தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு முறையில் இந்த ரயில் இயங்குகிறது. கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கணிணி, வழித்தடத்தில் உள்ள கணிணி, ரயிலில் உள்ள கணிணி மூன்றும் இணைந்து பயணத்தை வழி நடத்துகின்றன.

ரயில் நிலையம் மற்றும் தண்டவாளம் போன்ற தகவல்களை வழித்தடத்தில் உள்ள கணிணி கட்டுப்பாட்டு மையத்தோடு பகிர்ந்து கொள்கிறது. இரண்டு கணிணிகளும் தரும் தகவல்களின் அடிப்படையில் ரயிலில் உள்ள கணிணி ரயிலை இயக்கி வருகிறது.

பயணிகள் அனைவரும் ரயிலில் ஏறிய பின்னர் கதவு மூடப்படும். ரயிலின் அனைத்து கதவுகளும் மூடாவிட்டால் ரயில் புறப்படாது.
ரயில் முழுவதும் கண்காணிப்பு கேமரா வசதி செய்யப்பட்டிருக்கும். தண்டவாளப் பகுதியின் வீடியோ காட்சிகளை கட்டுப்பாட்டு அறையிலிருந்து பார்க்கும் வகையில் கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் ஏதேனும் ஒரு பொருளோ அல்லது நபரோ விழுந்து விட்டால் அது பற்றிய தகவலை வழித்தடத்தில் உள்ள கணிணி அனுப்பிவிடும். இதனையடுத்து உடனடியாக ரயில் நிற்கும். அவசர காலங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் பயணிகள் தொடர்பு கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. அவசர கால பிரேக்கை பயணி ஒருவர் பயன்படுத்தினால் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ரயிலில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்க முடியும்.

ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஒரே ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் கூடுதல் ரயில்களை அந்த வழித்தடத்தில் இயக்க முடியும். இத்தனை நவீன வசதிகள் கொண்டிருந்தாலும் தற்போதைக்கு ஓட்டுநர் இல்லா ரயிலின் இயக்கத்தை கண்காணிக்க ஒரு ஓட்டுநர் ரயிலில் இருப்பார் என்றும், குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் முழுமையான தானியங்கி ரயில் சேவையாக இயங்கும் என்று ரயில்வேதுறை கூறியுள்ளது.

எது எப்படியோ அயல்நாட்டில் உள்ள அனைத்து முன்னேற்றங்களும் நமது நாட்டில் படிப்படியாக வருகிறது என்றால் ஒட்டுமொத்த இந்தியருக்கும் பெருமையே.

Similar News