பறவைக்காய்ச்சல் எதிரொலி.. கேரளா கோழிகள் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு தடை.!
பறவைக்காய்ச்சல் எதிரொலி.. கேரளா கோழிகள் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு தடை.!
பறவை காய்ச்சலால் கேரளாவில் இருந்து கோழி, வாத்துகள் உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தற்போது கொரோனாவிற்கு அடுத்தபடியாக பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் வாத்து மற்றும் கோழிகள் திடீரென இறக்க ஆரம்பித்தது.
இதனால் இறந்த வாத்துகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் “எச் 5 என் 8” வகை வைரஸ் என்று சொல்லப்படும் பறவைக்காய்ச்சல் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே கோழிகள், வாத்துகள் இறக்க நேரிட்டது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சுற்றுவட்டாரத்தில் ஒரு கிமீ தொலைவில் உள்ள கோழி மற்றும் வாத்துகள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளா மாநிலம், ஆலப்புழா கோட்டயத்தில் பரவிய பறவை காய்ச்சல் தமிழகத்துக்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோழி, வாத்துக்களின் முட்டை, இறைச்சி, தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கால்நடை துறை இயக்குநர் ஞானசேரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ள 26 சோதனை சாவடிகள் கண்காணிப்பு தேவை என்றும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு குளோரின் -டை -ஆக்சைடு தெளிக்க வேண்டும் எனவும் கால்நடை இயக்குநர் தெரிவித்துள்ளார்.