நட்டா கார் மீது தாக்குதல் திட்டமிட்ட சதி: மம்தாவை கிடு.. கிடுக்க வைக்கும் உள்துறை அமைச்சக நடவடிக்கைகள்.!
நட்டா கார் மீது தாக்குதல் திட்டமிட்ட சதி: மம்தாவை கிடு.. கிடுக்க வைக்கும் உள்துறை அமைச்சக நடவடிக்கைகள்.!
அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா 2 நாள் பயணமாக கட்சி நிகழ்ச்சிகளுக்காக சென்ற புதன் கிழமை மேற்கு வங்கம் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், மம்தா கட்சியினர் அப்பாவி பாஜக தொண்டர்களை படுகொலை செய்த செயல்களை கடுமையாக கண்டித்து பேசினார்.
தொண்டர்களின் தியாகம் வீண் போகாது என்றார். பாஜக அங்கு ஆட்சி அமைத்தே தீரும் என்றார். அடுத்து டைமண்ட் ஹார்பர் பகுதியில் மறுநாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்றார்.
அப்போது, அவருடைய வாகனம் உட்பட அவருடன் சென்ற கட்சியினர் கார்கள் மீது மம்தாகட்சி தொண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், ஜே.பி. நட்டாவுக்கு காயம் ஏற்படவில்லை என்றாலும் அவரது காரின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. காளியின் அருளால் தாம் காப்பாற்றப்பட்டதாக நட்டா கூறினார்.
இருந்தபோதிலும், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்சியினர் பலர் காயமடைந்தனர். மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டி வருகிறது. இந்த சம்பவத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க ஆளுநர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அம்மாநில தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிஆகியோர் நேரில் ஆஜராகுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் ஆஜராக தேவையில்லை எனமேற்கு வங்க அரசு மறுத்துவிட்டது.
மேலும் இந்த சம்பவம் பாஜகவினர் திட்டமிட்டு செய்த சம்பவம் என்றும், பழியை தங்கள் மீது பாஜக போடுவதாக மம்தா கூறியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அமைந்தது. சட்டம் - ஒழுங்குக்கு பொறுப்பேற்றுள்ள முதல்வர் மம்தாவே இவ்வாறு பொறுப்பற்று பேசுவதா என பாஜகவினர் நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.