கர்நாடக டீக்கடைக்காரரிடம் போலி தங்கம் விற்ற ஓசூர் வாலிபர் கைது.!

கர்நாடக டீக்கடைக்காரரிடம் போலி தங்கம் விற்ற ஓசூர் வாலிபர் கைது.!

Update: 2020-12-03 11:36 GMT

பெங்களூரு பனசங்கரி 2-வது கிராசில் ‘டீ’ கடை நடத்தி வருபவர் சுகேஷ். இவரது கடைக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக, தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சங்கர் 38, என்பவர் வந்துள்ளார். சுகேஷ் கடையில் டீ குடித்துவிட்டு, அவருடன் நீண்ட நேரமாக பேசியுள்ளார். பின்னர் அங்கிருந்து கிளம்பிவிட்டதாக தெரிகிறது.


இதன் பின்னர் சுகேசுக்கும், சங்கருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் சுகேஷ் கடைக்கு சங்கர் சென்றுள்ளார். அப்போது தங்க கட்டிகளை சுகேசிடம் சங்கர் கொடுத்தாக கூறப்படுகிறது.

அந்த தங்க கட்டிகள் ஓசூரில் உள்ள குப்பை தொட்டியில் கிடைத்ததாகவும், தன்னிடம் 2 கிலோவுக்கு தங்கம் இருக்கின்றது. தனக்கு பணப்பிரச்சினை உள்ளது. இதனால் அவற்றை விற்க முடிவு செய்துள்ளதாக சுகேசிடம் சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் 2 கிலோ தங்கத்திற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுத்தால் போதும் என கூறியுள்ளார்.


இதனால் சந்தேகம் அடைந்த சுகேஷ் 2 கிலோ தங்கத்தையும் எடுத்து வரும்படியும், அது உண்மையானதா? என்று பரிசோதனை செய்து விட்டு வாங்கி கொள்கிறேன் என்று சங்கரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம் 2 கிலோ தங்கத்துடன் பெங்களூருவில் உள்ள சுகேசின் கடைக்கு சங்கர் சென்றுள்ளார். அந்த தங்கத்தை வாங்கி அவர் பரிசோதித்து பார்த்த போது, அது போலியானது என்பதை கண்டுபிடித்துள்ளார்.

இது பற்றி சங்கரிடம் கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இது குறித்து பனசங்கரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது அது போலி தங்கம் என்றும், அவற்றை விற்று சுகேசிடம் ரூ.3 லட்சம் வாங்கி சங்கர் மோசடி செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் இருந்த போலி தங்கத்தையும் அவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News