தீவிரவாத முகாம்களைக் குறி வைத்துத் தாக்கி அழித்த இந்திய ராணுவம்.!
தீவிரவாத முகாம்களைக் குறி வைத்துத் தாக்கி அழித்த இந்திய ராணுவம்.!
காஷ்மீர் எல்லைப்பகுதியில் குளிர்காலம் தீவிரமடையும் முன் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத தளங்களை(launch pads) குறிவைத்து தாக்கி அழித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களாக எப்படியாவது தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் மீது கூட தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வருடம் 18 பொதுமக்கள் மட்டுமே பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது வரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே உயிர்ச் சேதங்களை தவிர்க்கும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்கும் நடவடிக்கைகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே FATF தடைப் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க முடியும் என்று கண்டிப்புடன் கூறிவிட்ட நிலையில்,ஜம்மு-காஷ்மீரில் வசித்து வரும் இளைஞர்களை தூண்டிவிட்டு பாகிஸ்தானில் இருந்து அவர்களுக்கு ஆயுதங்களை அனுப்பி வைத்து, மறைமுகமாக தீவிரவாதத்தில் ஈடுபட பாகிஸ்தான் முயன்று வருவதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
பாகிஸ்தானின் தீவிரவாத அறைகூவலுக்கு செவிமடுக்கவில்லை என்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கும் விதமாகவே எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொது மக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக கருதப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கடுமையான தாக்குதலில் 5 பாதுகாப்பு படையினரும் 4 பொதுமக்களும் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பல பாகிஸ்தான் ராணுவ நிலைகளை பீரங்கிகளை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததோடு மேலும் 12 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின.