ஆசியான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இந்தியா ஒதுங்கியது சரியானதே: பொருளாதார நிபுணர்கள் பாராட்டு.!
ஆசியான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இந்தியா ஒதுங்கியது சரியானதே: பொருளாதார நிபுணர்கள் பாராட்டு.!
ஆர்.சி.இ.பி ஒப்பந்தம் என்பது, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, புரூனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய பத்து ஆசியான் நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய ஆறு நாடுகள் என மொத்தம் 16 நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தும் ஓர் ஒப்பந்தம். ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்ற இந்த ஒப்பந்தத்தால், 16 நாடுகளுக்குள் வரியில்லாமல் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்துகொள்ள முடியும்.
சென்ற ஆண்டு இதே காலக் கட்டத்தில் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் மேற்கண்ட 16 நாடுகள் கலந்துகொண்ட ஆர்.சி.இ.பி இறுதிக்கூட்டம் நடைபெற்றது. அப்போதுதான், இந்த ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகிக் கொண்டது. மற்ற 15 நாடுகள் வரியில்லா வர்த்தகத்துக்கு உடன்பட்டு ஏற்றுமதி இறக்குமதியை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டதால் நல்ல வாய்ப்பை இந்தியா நழுவவிட்டிருக்கிறது என்றுதான் பலர் நினைத்தனர். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சேராமல் விலகியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது, சீனப் பொருள்களுக்கு இந்தியச் சந்தையைத் திறந்துவிட வேண்டாம் என நினைப்பதுதான் என இந்தியா தரப்பில் கூறப்பட்டது.
சீனா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் மிக அதிகமாக உற்பத்தி செய்யும் பால் பொருள்களும், விவசாய விளைபொருள்களும், சிறு கைவினை தயாரிப்பு பொருள்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால் நம் நாட்டுக்கு தங்கு தடை இன்றி உள்ளே வந்துவிடும். இதனால் நம் நாட்டு கிராமப்புற உற்பத்தி பொருட்களின் தேவை நகர்ப்புறங்களில் குறைந்து விடும் என சிந்தித்த பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஆண்டே இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திடாமல் விலகியதை அப்போது நம் நாட்டு பத்திரிக்கைகளும், பொருளாதார நிபுணர்களும் பாராட்டினர்.