உலக நாடுகளே வியக்கும் இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி: மத்திய மந்திரி தகவல்

உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்து வியக்கும் வகையில் உள்ளதாக மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-08 06:00 GMT

தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் 113- ஆவது ஆண்டு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. வர்த்தக சபையின் தலைவர் அருண் வரவேற்றார். மத்திய எலக்ட்ரானிக்ஸ் தகவல் தொழில்நுட்பத் துறை திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணைமந்திரி ராஜீவ் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசியதாவது:-


தொழில்நுட்ப உற்பத்தி துறையில் சிறந்த சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு 85 சதவீதம் பேர் செல்போன் பயன்படுத்தினர். தற்போது 99.7 சதவீத பேர் செல்போன்களை பயன்படுத்துகின்றனர். 2014 ஆம் ஆண்டு மின்னணு பொருட்கள் இறக்குமதி செய்ய வேண்டிய சூழலில் தான் நாடு இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு மற்றும் ஒரு லட்சம் கோடி மதிப்புக்கு மின்னணு பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 9 ஆண்டில் தொழில்நுட்ப மற்றும் மின்னணுவியல் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் வியக்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளோம். புதிய தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பங்கு இல்லாத இடமே இல்லை என்ற நிலையை அடைந்துள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா தொழில்நுட்பத் துறையில் தலைமை இடத்தை வகிக்கும் வகையில் வளர்ச்சியை எட்டி வருகிறோம்.


தமிழக மண்ணின் மைந்தரான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை டிஜிட்டல் இந்தியாவில் உருவாக்குவதில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் முயற்சி மற்றும் பங்களிப்பு மகத்தானதாக உள்ளது என சுட்டிக்காட்டி உள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம்குக் என்னையும் நரேந்திர மோடியையும் சந்தித்தபோது இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாகி இருப்பதாகவும் இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை அதிகரிக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.


கடந்த 9 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் கணிசமான தூரம் பயணித்துள்ளோம். 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தொழில்நுட்ப நிபுணராக இருப்பதால் இந்திய வரலாற்றில் தற்போது மிகவும் உற்சாகமான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை என்னால் திட்டவட்டமாக கூற முடியும். பல கடின உழைப்புக்குப் பிறகு உலகில் அதிக பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ள நாடுகளில் ஐந்தாவது இடத்தில் இந்தியாவை கொண்டு வந்துள்ளோம்.


உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளர்ந்த நாடுகளில் இந்தியாவையும் இடம்பெறச் செய்துள்ளோம். மக்களுக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு உலகத்திற்கு நிரூபித்துள்ளது . இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News