மருத்துவ சேர்க்கையில் ‘கொவிட் போராளிகளின் வாரிசு' என்னும் புதிய பிரிவு அறிமுகம்!
மருத்துவ சேர்க்கையில் ‘கொவிட் போராளிகளின் வாரிசு' என்னும் புதிய பிரிவு அறிமுகம்!
வரும் 2020-21 கல்வியாண்டில் மத்திய இருப்பின் எம்பிபிஎஸ் இடங்களின் கீழ் மருத்துவச் சேர்க்கையில் ‘கொவிட் போராளிகளின் வாரிசு' என்ற புதிய பிரிவை அறிமுகப்படுத்த அரசு முடிவெடுத்திருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார்.
கொவிட் சிகிச்சை மற்றும் மேலாண்மையில், கொவிட் போராளிகளின் சிறப்பான பங்களிப்பைப் போற்றும் வகையிலும் அவர்களை கௌரவிக்கும் நோக்கத்துடனும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
“தங்களது கடமை மற்றும் மனிதநேயத்தை காப்பதற்காக தன்னலம் பாராமல் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றும் கொவிட் போராளிகளின் தியாகத்தை இது கௌரவிக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய இருப்பின் இடங்களின் மூலம் கொவிட்-19 காரணமாக தங்கள் இன்னுயிரை நீத்த அல்லது கொவிட்-19 சம்பந்தமான பணியின்போது விபத்தினால் உயிரிழந்தோரின் வாரிசுகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ரூ.50 லட்சம் தொகுப்பிலான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை போராளிகளுக்கு அறிவித்த போது, இந்திய அரசு கொவிட் போராளிகள் குறித்த விளக்கத்தை அறிவித்துள்ளதை அமைச்சர் நினைவு கூர்ந்தார். “கொவிட் போராளிகள் என்போர், கொவிட் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டோருடன் நேரடித் தொடர்பிலோ அல்லது நோய் தொற்று பாதிக்கும் அபாயம் உள்ள சமூக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பொது சுகாதாரத் துறையினர் ஆவர்.
தனியார் மருத்துவ ஊழியர் மற்றும் கொவிட்-19 தொடர்பான சிகிச்சைகள் வழங்கும் மத்திய அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் ஒப்பந்த சேவை புரியும் பணியாளர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தப் பிரிவினருக்கான தகுதிகள் குறித்து மாநில அரசுகள் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.