மீண்டும் இந்தியாவில் பப்ஜி வருகிறதா? ஆனால் சீனா தயாரிப்பு இல்லையாம்.!

மீண்டும் இந்தியாவில் பப்ஜி வருகிறதா? ஆனால் சீனா தயாரிப்பு இல்லையாம்.!

Update: 2020-11-13 08:17 GMT

இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள பப்ஜி விளையாட்டு மீண்டும் வரஇருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி இந்திய அரசு 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்தது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்கள் அல்லது சில நாட்களிலேயே பெரும்பாலான செயலிகள் ப்ளே ஸ்டோரிலிருந்து அழிந்து போனது. 

அதில் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான மல்டிப்ளேயர் விளையாட்டான பப்ஜியும் ஒன்று. இந்தியாவில் பப்ஜி விளையாட்டின் வன்முறை காரணமாகவும், நாட்டின் பாதுகாப்பை நிலைப்படுத்தவும் இதை நீக்குவதாக அறிவித்திருந்தது மத்திய அரசு.

அதிக பயனர்களைக் கொண்ட பப்ஜி செயலியை இந்தியாவில் நிலைப்படுத்த, தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன், சீன நிறுவனம் டென்சென்ட்டுடன் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் விடுத்து, தாமே முழு பொறுப்பையும் ஏற்கும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில், ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே தரவிறக்கம் செய்தவர்களுக்கு பப்ஜி பயன்பாட்டில் இருந்தது. இந்தியாவில் மட்டும் இந்த விளையாட்டை 50 மில்லியனுக்கு அதிகமானோர்கள் விளையாடி வந்தனர். ஆனால் ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கு அக்டோபர் 30ம் தேதி முதல் இயங்காது என நிரந்தர தடையும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

தற்போது இந்தியாவுக்கான பப்ஜியின் புதிய வெர்ஷன் வெளியாகும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தப் புதிய வெர்ஷனில் டென்செண்டின் தலையீடு இருக்காது. முழுக்க முழுக்க தென் கொரியாவை சேர்ந்த பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் இதனை கையாளும். இதே போல கொரியா, சீனா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பிரத்யேக பப்ஜி வெர்ஷன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், புதிய வெர்ஷன் வெளியிடுவது மட்டுமின்றி, இந்தியாவில் பப்ஜிக்கு தனி அலுவலகம், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு, உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டணி வைத்து புதிய திட்டங்களுடன் புதிய அவதாரம் எடுக்கிறது பப்ஜி என்று சொல்லப்படுகிறது.
 

Similar News