கேரள கன்னியாஸ்திரி கொலை.. பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!

கேரள கன்னியாஸ்திரி கொலை.. பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!

Update: 2020-12-23 16:22 GMT

கேரள மாநிலம் கோட்டயம் பயஸில் கன்னியாஸ்திரிகள் மடம் உள்ளது. இந்த மடத்தில் உள்ள கிணற்றில் 1992-ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி இளம் கன்னியாஸ்திரி அபயா 19, கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு கேரள போலீஸிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனிடையே பல இன்னலுக்கு பின்னர் வழக்குகள் நடைபெற்று வந்தது. இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
2009-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பாதிரியார் ஜோஸ் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத நிலையில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதன் பின்னர் கடந்த ஆகஸ்டு 26-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட 177 சாட்சிகளில் 49 பேர் சாட்சியம் அளித்தனர். இதில் ஒரு கன்னியாஸ்திரி உள்பட சிலர் முரண்பட்ட தகவல்களை அளித்ததால், வழக்கு விசாரணையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது.

இதன் பின்னர் இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டது. அதாவது சம்பவம் நடந்த அன்று பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய 2 பேரும் கிணற்றை எட்டி பார்த்தபடி பதற்றமாக இருந்ததாகவும், மிக மோசமான சூழலில் அவர்கள் இருந்ததாகவும் ராஜு என்ற திருடன் அளித்த வாக்குமூலம் தான், பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரையும் இந்த வழக்கில் சிக்க வைத்தது.

கடந்த 28 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் நேற்று பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் 2 பேரையும் கொலை குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சி.பி.ஐ. நீதிமன்றம் உறுதி செய்தது. தீர்ப்பை கேட்டதும் கன்னியாஸ்திரி செபி கதறி அழுதார்.

பாதிரியார் தாமஸ் கோட்டூர் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கான தண்டனை விவரத்தை இன்று திருவனந்தபுரம் சி.பி.ஐ., நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த வழக்கின் முதல் குற்றவாளியான பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.6.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வழக்கின் 2வது குற்றவாளியான கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரி இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Similar News