இன்று நடக்கவிருந்த மாபெரும் நாசவேலை - பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஆதரவு தீவிரவாத சதி திட்டம் முறியடிப்பு!
நாட்டின் 75வது சுதந்திர தினம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில், பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஆதரவுடன் நடைபெறவிருந்த தீவிரவாதசதித் திட்டத்தை பஞ்சாப், டெல்லி போலீஸார் முறியடித்துள்ளனர்.
இதுகுறித்து பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் கூறுகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லி போலீசார் உதவியுடன் கனடாவைச் சேர்ந்த ஆர்ஷ் டல்லா அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குர்ஜந்த்சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன், தீவிரவாத சதி செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இவர்களிடம் இருந்து பி-86 வகையைச் சேர்ந்த 3 கையெறி குண்டுகள், ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு மீட்கப்பட்டது.
மேலும், இரண்டு 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கூடிய40 குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் மிகப்பெரிய அளவிலான தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார்.
Input From: HinduTamil