பிரதமர் மோடி உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: உளவுத்துறை கடும் எச்சரிக்கை!

Update: 2022-01-18 13:24 GMT

பிரதமர் மோடி உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அறிக்கையாகவும் சமர்ப்பித்துள்ளது.

இந்தியாவின் 73வது குடியரசு தினவிழா ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் விழாவுக்கான ஏற்பாடுகள் தற்பொழுது இருந்தே தொடங்கப்பட்டுள்ளது. அதே போன்று டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதனால் விழா நடைபெறும் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியரசு தின விழாவில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியிருப்பதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதாகவும் உளவுத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய உளவுத்துறை 9 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், விழாவில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களின் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக தீவிரவாதிகளின் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்காக லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் எதிர்ப்பு குழுக்கள் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இதன் பின்னணியில் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் விழா நடைபெறும் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு, பகலாக ரோந்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Source: Maalaimalar

Image Courtesy: DW

Tags:    

Similar News