டெல்லி காதி கடையில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை.!
டெல்லி காதி கடையில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை.!
புது டெல்லி காதி பவனில் ஒரே நாளில் தீபாவளி விற்பனையாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கதர் துணிகள் விற்பனையானது. புதுதில்லியின் கனாட் பிளேஸில் உள்ள காதி இந்தியா ஸ்தாபனத்தில் கடந்த 40 நாட்களில் நான்காவது முறையாக பொருட்களின் விற்பனை ஒரு நாளில் ரூபாய் ஒரு கோடியைத் தாண்டியுள்ளது என்பது கடந்த தீபாவளி சீசன்களில் எப்போதுமில்லாத ஒன்றாகும் எனக் கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 13-ஆம் தேதி இங்கு ஒரே நாளில் ரூபாய் ஒரு கோடியே 11 இலட்சத்துக்கு நிகழ்ந்த விற்பனை இந்த ஆண்டின் அதிகபட்ச ஒருநாள் விற்பனையாக சாதனை படைத்துள்ளது. பொது முடக்கத்திற்குப் பிறகு வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது முதல் காந்தி ஜெயந்தி அன்றும் கடந்த அக்டோபர் 24 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் ரூபாய் ஒரு கோடிக்கும் மேலாக இங்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி ரூபாய் 1.27 கோடியாக நடைபெற்ற விற்பனையே இதுவரை ஒரு நாளின் அதிக பட்ச விற்பனையாக உள்ளது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய அதிகாரிகள் இந்த விற்பனை குறித்து கூறுகையில், சுதேசி பொருட்களான காதி பொருட்களை ஊக்கப்படுத்துமாறு பிரதமர் அண்மைக்காலங்களில் கேட்டுக்கொண்டுள்ளதை அடுத்து விற்பனை பெருமளவு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார்.
கொரோனாவையும் பொருட்படுத்தாமல் காதி கலைஞர்கள் தங்களது உற்பத்தி நடவடிக்கையை முழு வீச்சில் செயல்படுத்தி, பொது மக்களும் அதற்கு நல்ல வரவேற்பு தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக சொல்லப் போனால் மத்திய அரசு ஊழியர்கள் வாரத்துக்கு ஒரு நாளேனும் கதர் சட்டை அணிந்து அதன் மூலம் கைத்தறி தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என பிரதமர் ஒவ்வோர் ஆண்டும் கோரிக்கை விடுக்கிறார். இதற்கு குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல பிரதமரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து டெல்லி மக்களும் கதர் பொருட்களை நாடி வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் சிலர் கூறுகையில் காங்கிரசார் தங்கள் அரசியலுக்காக கதர் சட்டை, கதர் ஜிப்பா அணிந்திருப்பார்கள், ஆனால் அவர்கள் தங்கள் ஆட்சி காலங்களில் கதர் விற்பனை பொருட்கள், சுதேசி பொருட்கள் விற்பனையை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுத்ததில்லை. கதர் தொழில்கள், கடைகள் நலிந்து ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டன. ஆனால் நரேந்திர மோடி அவர்களின் பிரச்சாரம், விழிப்புணர்வு, காந்தீய சிந்தனைகளில் அவருக்குள்ள நம்பிக்கை காரணமாக இப்போது கதர் தொழில் மீண்டும் துளிர்த்து வருவதாக அவர்கள் கூறினர்.