தொலைத் தொடர்பு கட்டணங்களை உயர்த்துங்க.. பிரபல கம்பெனியின் தலைவர் கோரிக்கை.!

தொலைத் தொடர்பு கட்டணங்களை உயர்த்துங்க.. பிரபல கம்பெனியின் தலைவர் கோரிக்கை.!

Update: 2020-11-23 13:51 GMT

நாடு முழுவதும் ஒவ்வொரு குடிமகனின் கைகளிலும் இன்று செல்போன் இருப்பதை பார்க்க முடியும். அதுவும் கொரோனாவுக்கு பின்னர் செல்போனின் பயன்பாடு மிகவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றே கூறலாம். அதற்கு முக்கிய காரணம், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டதே.
இதனால் ஒரு வீட்டில் 3 குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் 3 பேருக்கும் செல்போன் வாங்கி கொடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது. 
இந்நிலையில், தொலைத் தொடர்பு கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.


தற்போதைய தொலைத்தொடர்பு கட்டணங்கள் நிலையானது கிடையாது என்று கூறியுள்ள அவர், சந்தையின் தேவைக்கேற்ப கட்டணங்களை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். எனினும், தாங்கள் மட்டும் தனியாக கட்டணங்களை உயர்த்த மாட்டோம் என்றும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைத்தொடர்பு துறை கூட்டமைப்பின் முடிவுகளுக்கு ஏற்ப கட்டண உயர்வு இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 5 ஜி தொழில்நுட்ப கருவிகளை இந்தியாவில் அனுமதிப்பது குறித்து உறுதியான முடிவை எடுக்க வேண்டும் எனவும் மிட்டல் தெரிவித்துள்ளார். குறிப்பாக சீனாவின் 5 ஜி தொலைத் தொடர்புக் கருவிகளை இந்தியாவில் அனுமதிக்க அரசு தயக்கம் காட்டி வருகிறது. அது பற்றிய முடிவு உடனடியாக எடுக்க வேண்டும். பொதுவாக எல்லா தொழில்நுட்பங்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதையும் மிட்டல் வலியுறுத்தி உள்ளார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு செலுத்த வேண்டிய 18 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை குறித்து பேசிய அவர், தற்போதைய சூழலில் இவ்வளவு பெரிய தொகையை கொடுப்பது எளிதான விஷயமல்ல என்றும், இது தொடர்பாக இறுதி முடிவு விரைவில் எட்டப்படும் என்றும் குறிப்பிட்டார். 5 ஜி தொலைத்தொடர்பு சேவைக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் விலை மிக அதிகமானது என்றும் குறிப்பிட்ட அவர், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்துக்கு மிக வேகமாக மாறி வருகின்றன. அப்படியான ஒரு நிலை இந்தியாவில் இல்லை. ஆனால் இதர தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப 5 ஜி தொழில்நுட்பம் வளரும் எனவும் கூறினார்.

Similar News