நாட்டில் 5,000 உயிரி-எரிவாயு மையங்களை அமைக்க ரூ 2 லட்சம் கோடி முதலீடு.!

நாட்டில் 5,000 உயிரி-எரிவாயு மையங்களை அமைக்க ரூ 2 லட்சம் கோடி முதலீடு.!

Update: 2020-11-22 07:00 GMT

இந்திய எரிசக்தி துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால், இந்தியாவை முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய இலக்காக உருவாக்க தொடர்ச்சியான கொள்கை முடிவுகளை தமது அரசு எடுத்து வருவதாக  பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இப்போது எண்ணெய் வளங்கள் கண்டறிதல் மற்றும் உற்பத்தித் திட்டங்களில் 100 சதவிகிதம் அந்நிய முதலீடை அனுமதிப்பதாகக் கூறிய பிரதமர், பொதுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்கள் தாமாக 49 சதவிகிதம் அந்நிய முதலீட்டைப் பெறும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சீர்திருத்தங்கள் காரணமாக இந்தத் துறையில் அந்நிய முதலீடு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த பிரதமர், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி நாடு அடி எடுத்து வைக்கிறது என்றார். `ஒரே தேசம் ஒரு எரிவாயு பாதை’ என்ற இலக்கை முன்னெடுக்க, எரிவாயு குழாய் கட்டமைப்பு முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

எத்தனால் உபயோகத்தை அதிகரிப்பது மற்றும் இரண்டாம் தலைமுறை எத்தனால், அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு, பயோ டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், இறக்குமதியாகும் எரிவாயுவை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக  நம் நாடு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்தி மையங்களை நாடு முழுவதும் நிறுவுவதற்காக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதானின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், நாட்டில் 5,000 அழுத்தமூட்டப்பட்ட உயிரி-எரிவாயு மையங்களை அமைக்க ரூ 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று கூறினார். ஜெபிஎம் குழுமம், அதானி கேஸ், டோரண்ட் கேஸ், பெட்ரோநெட் எல் என் ஜி, இந்தியன் ஆயில், பிராஜ் இண்டஸ்ட்ரீஸ், சீ ஈ ஐ டி கன்சல்டன்ட்ஸ் மற்றும் பாரத் எனெர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Similar News